முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 131வது ஆண்டு ஜனன தினம் இன்று !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 27 மார்ச், 2023

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 131வது ஆண்டு ஜனன தினம் இன்று !!!

 


உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 131வது ஆண்டு ஜனன தினம் (27.03.2023- திங்கட்கிழமை)  ஆகும்.

அடிகளார் 1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து 1947.07.19ஆம் திகதி மகா சமாதி அடைந்தார். இன்றுடன் அவர் இவ் வையகத்தில் அவதரித்து 131வருடங்களாகின்றது.அவர் மகாசமாதியடைந்து 75வருடங்களாகின்றன. ஆக வாழ்ந்த காலம் 55வருடங்கள்.

அவர் மகாசமாதி அடைந்த யூலை 19 தினத்தை கௌரவிக்குமுகமாக இலங்கை அரசாங்கம் அகிலஇலங்கை தமிழ் மொழித்தினபோட்டிகளின் இறுநாள் விழாவை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள மகாசமாதி கல்லறையில் அவர் யாத்த பாடல் இன்றும் மிளர்ந்துகொண்டிருக்கிறது.

இன்றைய நன்நாளில் அப்பாடலின் விளக்கத்தை இன்றைய சந்ததிக்கு எடுத்தியம்புதல் பொருத்தமாகும்.

'வெள்ளை நிற மலிகையோ -விபுலானந்தர்
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது'


வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.


'காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.'


மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.


'பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.'


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.


அடிகளார் ஆற்றிய அளப்பரிய பணிகளை இன்றும் தமிழ்கூறு நல்லுலகம் நினைவில் கொண்டிருக்கிறது. இயல்இசைநாடகம் ஆகிய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலாநந்தர்.

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் விபுலானந்தர். சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வனவாகும்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இந்தியாவில் இராமகிருஷ்ண மிஷனின் "இராமகிருஷ்ண விஜயம்" என்று தமிழ் சஞ்சிகைக்கும், "பிரபுத்த பாரத " "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் பிரதம ஆசிரியராக 1924 களில் பணியாற்றி இருந்தார். பின்னர் 1926 களில் கொழும்பில் இருந்து வெளிவந்த "விவேகானந்தன்" என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

அதாகப்பட்டது இலங்கையின் முதலாவது தமிழ் பிரதம ஆசிரியராக இலங்கையரான தமிழ் இந்து துறவி சுவாமி விபுலானந்த அடிகளார் மிளிர்கின்றார் என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல.

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுகின்ற 'யாழ்நூல்' என்னும் பொக்கிசத்தைத் தரணிக்குத் தந்த சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் 1892.-03-.27 அன்று சாமித்தம்பி_-கண்ணம்மை தம்பதியருக்கு மகனாக 'தம்பிப்பிள்ளை' என்ற நாமத்தோடு அவதரித்தார். சிறுவயதில் நோய்வாய்ப்படவே கதிர்காம முருகனின் பெயராகிய 'மயில்வாகனன்' எனும் பெயரை பெற்றோர் சூட்டினர்.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அன்று பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவ விட்டவர் விபுலானந்த அடிகளார் என்பது பலருக்குத் தெரியாத விடயம்.

இன்று பாரதியாரைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன.

விபுலானந்தர் தமிழ்நாட்டில் கால் ஊன்றாமல் இருந்திருந்தால் மகாகவி பாரதியாரை உலகம் காணாது இருந்திருக்கும். பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும்.சுவாமி விபுலானந்தர் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியின் திறமையை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற 'கங்கையில் விடுத்த ஓலை' என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக் கொண்டிருக்கின்றன.

சுவாமி விபுலானந்த அடிகள் மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார்.கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.


ஆங்கிலக் கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16வது வயதிலேயே கேம்பிரிட்ஜ் பரீட்சையில் சித்தியெய்தினார். 1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று 'இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்' என்னும் பெருமையையும் பெற்றார். 1919இல் லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி தேர்விலும் சித்தியடைந்தார்.

கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார்.

மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ்சிவப்பிரகாசம்,சிவஞான சித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 1925ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.

மயில்வாகனனுக்கு சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சித்தானந்தரினால் பிரபோத சைதன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. 1924இல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து 'பிரபோத சைதன்யர்' என்னும் பெயர் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பௌர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி சிவானந்தரால் 'சுவாமி விபுலானந்தர்' என்னும் நாமம் சூட்டப் பெற்றார். கல்லடி உப்போடையில் விபுலானந்தர் தாம் அமைத்த பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது தமது குருவின் ஞாபகார்த்தமாகவே.

'கலை அறிவியல் மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி' என்பது அடிகளாரின் கருத்தாகும். 1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர்மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். மேலும் இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும,1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாகஇஅறிவியல் கலைஞராக,ஆத்மீக ஞானியா,ஆற்றல் மிகு பேராசிரியரா,இயற்றமிழ் வல்லுனரா,இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில்த எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார்.யாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன. மேலும் இலக்கியம், இசை,சமயம, மொழியியல், கல்வி, அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார்.

மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924, கருமயோகம் (1934, ஞான யோகம் (1934 நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941, விவேகானந்தரின் பிரசங்கம் (1934, அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933, கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936) கலைச் சொற்கள் வேதிநூல் (1938, மின்சார சாத்தி வரலாறு,விஞ்ஞான தீபம் (1922, விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.
அப்படி ஈழம் முதல் பணி இமயம்வரை கொடி கட்டிய இசைத்தமிழனான அடிகளாரின் 131வது ஜனனதினவிழா உலகின் எட்டுத்திக்கிலும் புகழ்பரப்ப பரவலாக கொண்டாடப்படவேண்டும் என்பதே எமது வேணவா.


விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
முன்னாள் தலைவர் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம். 
காரைதீவு.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages