வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 16.02.2021 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயம் 500 வருடங்கள் வரலாற்றைக்கொண்ட பழமையான ஆலயம் என வரலாறுகள் கூறுகின்றன. கல்முனை மாநகரின் தென்கோடியிலே கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் இங்குள்ள தமிழ் மக்களின் இருப்பையும் பழமையையும் பறைசாற்றும் ஆலயமாக விளங்குகின்றது.
திருவிழா காலங்களில் தினமும் அதிகாலை 4.00 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் விஷேட பூசைகள் இடம்பெறுவதுடன் 12 ஆம் நாள் திருவிழாவான எதிர்வரும் 27.02.2021 தீர்த்தோற்சவம் இடம்பெற்று 13 ஆம் திருவிழாவான 28.02.2021 வைரவர் பூசையுடன் உற்சவம் நிறைவுபெறும்.
உற்சவ காலத்தில் கல்முனை மாநகரமே கோலாகலமாக காட்சியளிப்பது வழமை. மக்கள் குதூகமாக பங்கேற்பர். யானைகள் பவனிவர தமிழர் கலாசார நிகழ்வுகளுடன் விநாயகப்பெருமான நகர் வலம் செல்லுதல் சிறப்பம்சமாகும். தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக இம்முறை திருவிழாக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வி.ரி.சகாதேவராஜா