இனநல்லிணக்கத்திற்கு சமுகவலைத்தளங்கள் பாரியசவால் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 13 செப்டம்பர், 2018

இனநல்லிணக்கத்திற்கு சமுகவலைத்தளங்கள் பாரியசவால் !

இனநல்லிணக்கத்திற்கு சமுகவலைத்தளங்கள் பாரியசவால்!
இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன்.

சமகாலத்தில் இன நல்லிணக்கத்திற்கு சமுகவலைத்தளங்கள் பாரிய சவாலாக உள்ளன. அவை இனமுரண்பாடுகளை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக மாறிவருகின்றமை கவலைக்குரியது.

இவ்வாறு காரைதீவுப்பிரதேச நல்லிணக்கக்குழுவின் ஈராண்டு நிறைவையொட்டிய நிகழ்வில் உரையாற்றிய காரைதீவின் புதிய பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு நல்லிணக்கக்குழுத்தலைவர் எஸ்.தங்கவேல் தலைமையில் பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் சனியன்று நடைபெற்றது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொறுப்பதிகாரி  சமாதானத்திற்கும் சமுகப்பாதுகாப்பிற்குமான நிலையத்திற்கான மாவட்ட இணைப்பாளர்களான எஸ்.ராஜேந்திரன் எம்.சமீம் ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு புதிய பிரதேசசெயலாளர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:

இலங்கையில் 4மதங்கள் 3இனங்கள் ஒன்றாக வாழ்கின்றன என்று கூறினாலும் சரியான இணக்கப்பாடு அவர்களிடையே இல்லையெனலாம்.

இங்கு 4வது இனமொன்று உள்ளது. அதுதான் இனநல்லுறவைக் குழப்பி சுயலாபம் அனுபவிக்கும் இனம். அந்த இனம் சமுகம் நல்லுறவோடு வாழ்வதை விரும்பாது. அந்த இனத்திற்கு நாம் இடமளிக்கும்வரை இதயசுத்தியுடனான உறவை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது.

இனங்களுக்கு சரியான சமத்துவம் நல்லாட்சி எனக்கூறப்பட்டாலும் இன்னும் சில பாரபட்சங்கள் இருப்பதை மறைக்கமுடியாது. நானும் ஒரு பிரஜை என்ற அடிப்படையில் இதனைக்கூறப்பயப்படவில்லை.அரசகாணியை சமயதலங்களுக்கு வழங்கும்போது சமயத்துக்குச்சமயம் வேறுபட்ட சட்டம் நீதி கடைப்பிடிக்கப்படுகின்றது.

உதாரணமாக பௌத்த வணக்கஸ்தலத்திற்கு அரசகாணியை வழங்குவதானால் 'பூஜா ஒப்புவ' எனும் சட்டத்தின்கீழ் குத்தகை என்ற பேச்சுக்கிடமில்லாமல் நன்கொடையாக வழங்கலாம். ஆனால் ஏனைய இந்து இஸ்லாம் கிறிஸ்தவ சமயத்தலங்களுக்கு காணி வழங்குவதானால் நீண்டகால குத்தகை அடிப்படையில் மாத்திரமே வழங்கலாம்.

எனினும் நல்லாட்சி அரசில் இனநல்லிணக்கத்திற்கு ஒரு அமைச்சை ஸ்தாபித்து அதற்கு தமிழரொருவரை அமைச்சராகவும் முஸ்லிம் ஒருவரை பிரதியமைச்சராகவும் நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்.

ஒரு இனம் மற்றொரு இனத்தை தவிர்த்து அல்லது மிதித்து வாழமுடியாது. இனப்புரிதல்கள் உருவாகவேண்டும். இன்று இனரீதியாக சிந்திக்கின்ற மனப்பாங்கு கூடிவருகின்றது. அரசியல்வாதிகள் முதல் அரச அதிகாரிகள் வரை இதன் பின்னால் செல்வதைக்காணலாம்.

நபிகள் யேசுபிரான் கிருஸ்ணர் எல்லோரும் மாடுமேய்த்தார்கள். மக்களை நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின. ஒரு எழுத்திலே பெயர்கள் மாறியுள்ளன. மாரி மேரியாகி மரியமாக உள்ளது. ஆனால் நாம் பிறப்பிலே இனவேறுபாட்டுடன் பிறந்ததுபோன்று வைரம் பாராட்டுகின்றோம்.

கலந்துரையாடினால் பல பிரச்சினைகள் தீரும். தொலைக்காட்சி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எமது கலாசாரத்தை அழிக்கத்தலைப்பட்டுள்ளன. இன்று பலரும் ரி.வி. தொடர்களுக்கு அடிமையாகிவிட்டனர். இரத்த உறவுகளிடம்கூட செல்வதில்லை. சின்னத்திரை நெடுந்தொடர்கள் மக்களை அடிமையாக்கியுள்ளன. இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே முரண்பாடு.
சிலவேளை ஊடகங்களில் வருகின்ற சூடான தலைப்புகளும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றன. 

மாணவர் மத்தியில் கட்டொழுங்கு இல்லை. ஆசிரியரை மதிப்பதில்லை. பாடசாலையை நடாத்துவதில் அதிபர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். போதைப்பொருள்  எளிதாக மாணவர் மத்தியில் ஊடுருவிவருகின்றன. அவர்கள் என்னசெய்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை.

எனவே பொதுமக்கள் சமுக உணர்வுடன் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டால் மாத்திரமே நல்லுறவைப்பேணமுடியும். முதலில் நாம் காரைதீவு மட்டத்தில் சகல இனங்களும் நல்லுறவைப்பேணி முன்னுதாரணமாகத்திகழ்ந்து காட்டவேண்டும். என்றார்.

கூட்டத்தில் அங்கத்தவர்களான எம்.றியால் எம்.தங்கராணி எம்.சைபுதீன் சு.தில்லையம்பலம் ஆகியோர் கருத்துரைத்தனர்.




Post Bottom Ad

Responsive Ads Here

Pages